tamilnadu

img

கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து உயிர்பிழைத்த இரு குழந்தைகள்

சென்னை,ஏப். 24-தாயின் கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த இரு குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பற்றப்பட்டுள்ளது.இக்குழந்தைகள் பங்களாதேஷைச் சேர்ந்த இரு பெண்களுக்கு ( துனியா கண்டோகர் மற்றும் பாத்திமா) பிறந்தவையாகும். இக்குழந்தைகள், வேறு மருத்துவமனைகளில் பிறந்த பிறகு, தீவிர பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவில் சிகிச்சைப் பெறுவதற்காக மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து வரப்பட்டிருந்தனர். கடந்த காலத்தில் குறை மாதத்தில் குழந்தைகளைப் பெற்றிருக்கும் இந்த தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு முந்தைய நிலையில் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவம் இவர்களுக்கு ஏற்பட்டது. கருவுற்றதிலிருந்து 23-24 வாரங்கள் என்ற காலஅளவிற்குள்ளே பிறந்த இக்குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம் இருந்தது மட்டுமின்றி, ஊன்பசை சருமம் மற்றும் உரிய வளர்ச்சி பெறாத குடல் ஆகிய பிரச்சனைகளும் இருந்தன. முறையே 480 கிராம் மற்றும் 600 கிராம் என்ற குறைந்த எடையைக் கொண்டிருந்த இக்குழந்தைகளுக்கு விரிவான மருத்துவக் கண்காணிப்பும் மற்றும் அவைகள் உயிர்பிழைத்து இயல்பான குழந்தைகளாக ஆவதற்கு 24 மணிநேர தீவிர சிகிச்சை ஆதரவும் தேவைப்பட்டது. அறிவியல்பூர்வமாக பார்க்கையில், 23-24 வாரங்கள் என்ற கர்ப்பகாலத்தின் இரண்டாவது பருவத்தில் பிறக்கின்ற குழந்தைகள் உயிர்பிழைக்கின்ற வெற்றி விகிதமானது, மிக அரிதாகவே இருக்கிறது. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் தலைமை நிபுணர் டாக்டர். ராகுல் யாதவ் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதுநிலை மருத்துவர்கள்   டாக்டர். ஷோபனா ராஜேந்திரன் மற்றும் டாக்டர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கை சுவாச சாதனத்தை பயன்படுத்தி பிறந்த குறைப்பிரசவ குழந்தைகள் சுவாசிக்க உதவி, ஒரு இரட்டை சுவர் கொண்ட இன்குபேட்டரில் வைத்து சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ராகுல் யாதவ் பாத்திமா பங்களாதேஷில் குறைந்த வருவாயுள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏராளமானோர் மனமுவந்து நிதியுதவி செய்கிற கிரவுடு பண்டிங் என்ற நிதிதிரட்டல் நடவடிக்கையின் வழியாக இந்த சிகிச்சைக்கான தொகையை சேகரிக்க இவர்களுக்கு மருத்துவமனை உதவியது என்றார்.  தற்போது துனியா மற்றும் பாத்திமா ஆகியோரின் குழந்தைகளது உடல்எடை முறையே 1.4 கி.கிராம் மற்றும் 1.8 கி.கிராம் என நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. 

;