சென்னை:
சத்துணவு மைய பணி நியமனங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீட்டின் படி பணி வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி பொதுச் செயலாளர் நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், அந்த மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகின்றனர். சத்துணவு உதவியாளர் பணிக்குக்கூட ரூ.2 லட்சம் வரை ஆளும் கட்சியினரால் லஞ்சம் கேட்கப்படுவது குறித்தெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளதை, தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016ன்படி 4 விழுக்காடு இடஒதுக்கீடு முறை கடைப்பிடித்து பணியாளர்களை நியமனம் செய்வதில் மாவட் டங்களில் வெளிப்படை தன்மை கடந்த பல ஆண்டுகளாகவே கடைப்பிடிக்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. எனவே, இத்திட்டப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில், பணி நியமனம் செய்வோரின் பட்டியல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலக செய்திப்பலகையில் ஒட்டுவதுடன்; பத்திரிகை, ஊடகங்களுக்கு செய்தி வெளியீடு அளித்திடவும், உத்தரவிட எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பின்னடைவு இடங்கள்
மத்திய, மாநில அரசுத்துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணி இடங்களை கண்டறிந்து மூன்று மாதங்களில் நிரப்ப 2013 அக்டோபரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் பின்னடைவு காலிப்பணியிடங்கள் கண்டறிந்து அறிவிக்கப்படக்கூட இல்லை என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை கண்டறிந்து நிரப்பவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கோருகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.