பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிப்பு
சிதம்பரம், மே 26- நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் மழையின் காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் அலையாத்தி காடுகளில் படகு சவாரி செய்யும் வசதியை தமிழக சுற்றுலா மையம் மற்றும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் தமிழகத்தின் வெகு தொலைவில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை சாரலுடன் காற்று பலமாக வீசுவதால், ஊட்டியில் உள்ள படகு சவாரி மையத்தில் மிதிப்படகுகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்காடு பகுதியிலும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்ய முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தற்போது பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் கோடை விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. பிச்சாவரம் படகு ஓட்டுநர்கள் தெரிவித்தபடி, இங்கு 30-க்கும் மேற்பட்ட துடுப்பு படகுகளும் 15-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளும் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோடைகால விடுமுறையில் வரும் பயணிகளின் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வருகிறது. ஆனால் போதிய அளவு படகு இல்லாததால் பல பேர் திரும்பிச் செல்கிறார்கள். இங்கு 60-க்கும் மேற்பட்ட படகு ஓட்டுநர்கள் படகுகளை இயக்கி வருகின்றனர். எங்களை நிரந்தரமாக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசிடம் மனு அளித்து வருகிறோம். ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு 30 விழுக்காடு கமிஷன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யும் வரை வழங்க வேண்டும் என படகு ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.