tamilnadu

சென்னை, நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

சாலையில் கொட்டும் கட்டிட கழிவுகள்: கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

சென்னை, அக். 5- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிறு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்போது அங்கு இடிக்கப்படும் பழைய கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அந்தந்த பகுதி நடைபாதையிலும், சாலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் பாதசாரிகளுக்கும், வாகன் ஓட்டிகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று சாலையில் குப்பைக் கழிவுகளை கொட்டுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் அந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஔவை சண்முகம் சாலையில் கட்டிட இடிபாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொட்டப்பட்டுள்ளன. கட்டட கழிவுகள் சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இரவு நேரங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் இதுபோன்ற கட்டிடக் கழிவுகளை சாலையிலேயே கொட்டிவிட்டுச் செல்கின்றனர். சாலைகள், பாலங்கள், சாலை மேம்பாலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பெரிய கட்டுமானங்களில் ஈடுபடுபவர்கள் நாள்தோறும் 20 டன் கழிவுகளை உருவாக்குகின்றனர். ஒரு கட்டுமானத் திட்டத்தில் சுமார் 300 டன் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டிடக் கழிவுகளைத் தரம்பிரிப்பதற்கும் கழிப்பதற்குமான வசதிகள் இருந்தால், கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுமானப் பொருட்களாகக் குறைந்த செலவில் பயன்படுத்த முடியும். அத்துடன் நகரத்தில் உள்ள நீர்நிலைகள், பள்ளங்களில் போய் சேர்ந்து மாசுபடாமலும் தடுக்க முடியும். கட்டுமானக் கழிவுகளை நொறுக்கி சுத்தம் செயது ரெடிமிகஸ் கான்கிரீட், கொப் ஸ்டோனஸ், சிமெண்ட செங்கல்கள், வழித்தடக் கற்கள், ஹாலோ பிரிகஸ் மற்றும் மேனுபேக்சாட் மணலாக மாற்றிப் பயன்படுத்த முடியும். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதுபோல் சாலையில் கழிவுகளை கொட்டும் தனியார் நிறுவங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டடக் கழிவுகளைத் தரம் பிரிப்பதற்கும், கழிப்பதற்குமான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயம்   
தரங்கம்பாடி, அக்.6- நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரஸ்தா மணவெளி தெருவில் வசித்து வரும் பெருமாள் மகன் பிரகாஷ்(19). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பிரகாஷ் அவரது நண்பர் ராஜாராமனும் மன்னம் பந்தலில் உள்ள நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மன்னம்பந்தல் மூங்கில் தோட்டம் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிரே இடது புறமாக வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் வலது கால் துண்டாகியது. பின்னால் அமர்ந்து இருந்த அவரது நண்பர் ராஜாராமன் கால் முறிவு ஏற்பட்டது. பிரகாஷ் தலைக்கவசம் அணிந்திருந்த தால் உயிர் தப்பினார். பிறகு தனியார் மருத்துவமனையில் பிரகாஷ், ராஜா ராமன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். பிரகாஷ் கால் துண்டித்தால் ரத்தப்போக்கு அதிகமாகி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து மயிலாடு துறை காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி பேருந்துகள் மிக அதிக மாக வேகத்தில் அப்பகுதியில் சென்று இதுபோன்ற விபத்து களுக்கு காரணமாக இருந்து வருகிறது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

தோழர் சீனிவாசராவ் நினைவுதினம்
தரங்கம்பாடி, அக்.6- நாகை மாவட்டம், தில்லையாடியில் தோழர் பி.சீனி வாசராவ் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு விவசாயி கள் சங்க தரங்கம்பாடி வட்டக்குழு சார்பில் வட்டக்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரைராஜ், வட்டச் செயலாளர் இராசையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.