tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: உள்துறை அதிகாரி உட்பட 20 பேர் கைது...

சென்னை:
ஆறு மாதங்களுக்குப் பின்னர், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டு வழக்கில் உள்துறை அலுவலர் உள்பட 20 பேரைக் கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு விஏஓ, உள்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்குப் பலலட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகில் உள்ள கீழக்கரையில் தேர்வு எழுதிய 99 பேர் ஒட்டுமொத்தமாக தேர்வு பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே வெளிமாவட் டத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து திட்டமிட்டு இந்த மையத்தில் தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்கள் குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் 99 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, தேர்வு எழுத தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன், முன்னாள் டிஜிபியின் கார் டிரைவர் மற்றும் ஒரு எஸ்.ஐ., புரோக்கர்கள் துணையுடன் மோசடி நடந்தது தெரியவந்தது.இது குறித்து விசாரித்தபோதுதான், மேலும் பல தேர்வுகளில் இதுபோல முறைகேட்டில் பல முறை ஈடுபட்டதும், அவர்களில் பலர் தற்போது பணியில் இருப்பதும் தெரியவந்தது.அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பிறகு விசாரணை பாதியிலேயே நின்றுவிட்டது. சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.பின்னர் உள்துறை, வருவாய் துறை, விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) உள்பட 20 பேரை காவல் துறையினர் கடந்த 10 நாளில் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 20 பேரையும் சஸ்பெண்ட் செய்யும்படி சம்பந்தப் பட்ட துறைகளுக்கு சிபிசிஐடி காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் 20 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 20க்கும் மேற்பட்டவர்களைத் தேடி வருகின்றனர்.6 மாதத்திற்குள் அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் இருந்தால் நான்கில் மூன்று பங்கு
சம்பளம் வழங்க வேண்டும். அதன்படி பார்த்தால், இவர்கள் வேலைக்கே செல்லாமல்,  சம்பளத்தை அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.