tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள்  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் திருக்குறள் சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மீண்டும் திருக்குறள் தொடர்பான பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை), கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை), கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை).  

இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித் தேர்வில் (குரூப் 2, குரூப் 2ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.