tamilnadu

img

10 ஆண்டுகளாக சென்னையை குட்டி சுவராக்கியுள்ளனர்- மு.க.ஸ்டாலின் காட்டம்

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகலில் திடீரென்று மழை பெய்தது. நேற்று பகல் 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு வரை வெளுத்து வாங்கியது. 
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை வரை கடல் பகுதியில் நிலவி வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தது. அப்போது திரள் மேக கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் மழை கொட்டியது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரை, ஆவடி ஆகிய 2 இடங்களிலும் அதி கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சென்னை மெரினா கடற்கரையில் 24 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதற்கு அடுத்த படியாக ஆவடியில் 23 செ.மீ. மழை பெய்தது.  மேலும் சென்னை எம்.ஜி.ஆர். நகர், கலெக்டர் அலுவலகம், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட 6 இடங்களில் தலா 20 செ.மீ. மழை கொட்டியது.
இதன் காரணமாக சென்னை நகரில் பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடானது. நேற்று மாலை நேரத்தில் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எதுவும் செய்யாமல் குட்டி சுவராக்கி வைத்துள்ளதால் தான் மழைநீர் இப்படி தேங்குகிறது. அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.