சென்னை, ஏப். 20- கோவிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை திரு வொற்றியூரில் உள்ள தியாக ராஜ சுவாமி கோவிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இந்த புகாரை அடுத்து சீனிவாசன் என்பவருக்கு பிரசாதம் விற்பனை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கடந்த மார்ச் மாதம் அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்து சீனி வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது, பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததை அடுத்தே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதில் தலையிட வேண்டியதில்லை என நீதிபதி தெரிவித்து, ஒப்பந்த தாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.