சென்னை, பிப். 29- 18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான உடன்பாடு வியாழனன்று கையெழுத்தானது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக. அதன் கூட்டணி கட்சிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் இராமநாதபுரம் தொகுதி முஸ்லீம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடன்பாடு கையெழுத்து
இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து 3ஆம் கட்ட பேச்சு வார்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன் வியாழ னன்று (பிப். 29) நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனக ராஜ், என்.குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதிமுக, பாஜக படுதோல்வி உறுதி
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், நடைபெற வுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக எனும் பாசிச சக்தியை வீழ்த்தும் வகையில் இந்தியா கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டு பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முழுமையாக முறியடித்திருக் கிறோம். 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே ஒரு தொகுதி யில் மட்டும் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது நடை பெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதன் ஆதரவு பெற்ற கட்சிகள், அதிமுக ஆகியவை 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைவார்கள், டெபாசிட் இழப்பார்கள். அதற்கான பணிகளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் மேற்கொள்ளும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
திமுகவுடன் புதனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. பல கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கும் சூழ்நிலையில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. எனவே தொகுதி களை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் 2 தொகுதிகள் என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சி களுடன் பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடு ஏற்பட்டவுடன் எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.சுப்பராயன், கோ.பழனிச்சாமி, மு.வீரபாண்டியன் ஆகி யோர் கலந்து பேச்சுவார்த்தையில் கொண்டனர். இதில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டது. இதை யடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இரா.முத்தரசன் கூறுகையில், “ஜனநாய கத்தை, அரசியலமைப்பு சட்டத்தை, மதச்சார்பின்மையை பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது பாசிச, சர்வாதிகார பாஜக ஆட்சி. இந்த தேசத்தை பாசிசப் பாதையில் அழை த்துச் செல்வதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதைத் தடுத்து ஜனநாயகத்தை, மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.