tamilnadu

img

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்

திருவாரூர், பிப்.22-  காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத மதிப்பீடு அடிப்படையில் நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் வருகை புரிந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சில இடங்களில் திடீர் ஆய்வுகளில் ஈடுபட்டார்.  இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  பாலசுப்பிரமணியன்-சித்ரா தம்பதியின் இளைய மகள் மருத்துவர் உதயா-மணமகன் மருத்துவர் துரையரசன் திருமண விழாவில் கலந்து கொண்டார்.  அப்போது முதல்வர் பேசுகையில், ‘‘காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பி பெய்த திடீர் மழையால் அறுவடை நேரத்தில் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு அதன் அடிப்படையில் தற்போது ஆய்வறிக்கை நிறைவு பெறும் நிலையில் உள்ளது. எனவே, இன்னும் ஒரு வார காலத்தில் பயிர் சேத மதிப்பீடு அடிப்படையில், விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணம் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும்’’என அறிவித்தார்.  விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திருமண விழாவிலே முதல்வரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கத்தினர் வரவேற்றனர்.  

விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். மன்னார்குடியில் முதல்வர் ஆய்வு முன்னதாக, மன்னார்குடியில் நகராட்சி சார்பில் நடைபெறும் நவீன பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை முதல்வர் ஆய்வு செய்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, மன்னார்குடி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.26.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.