சென்னை, மார்ச் 27 - பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, அவர்கள் கேட்ட சின்னங்களை வழங்க முடியாது என்று கூறி அநீதி இழைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 அன்று 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும். அன்று மாலை அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதில், குறிப்பிட்ட சின்னங்களைக் கேட்டு விண்ணப்பித்த அங்கீகாரம் பெறாத ‘நாம் தமிழர்’ போன்ற கட்சிகளுக்கு ஏற்கெனவே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதேபோல பாஜக கூட்டணியில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, பாஜக கூட்டணியிலுள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வுக்கு அவர்கள் கேட்டபடியே குக்கர் சின்னம், ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகாவுக்கு அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னம் உடனடியாக ஒதுக்கப்பட்டது.
ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கோரிய சின்னம் ஒதுக்கப்படவில்லை. முன்கூட்டியே விண்ணப்பித்தும் உரிய பதிலும் அளிக்கப்படவில்லை.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணை யத்திற்கு கடிதம் எழுதினார். பிறகு, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தர விட்டது. மதிமுக, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி போடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. எனினும், மார்ச் 27 காலை 9 மணிக்குள் இறுதி முடிவை தெரிவிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்பதே இறுதி முடிவு என்று மதிமுக வழக்கறி ஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.
தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று காலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்களும் தற்போதைய நிலையில், எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதன்மூலம் மதிமுகவிடமிருந்து பம்பரம் சின்னம் பறிக்கப்பட்டது.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பானைச் சின்னம் கேட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், புதன்கிழமை மாலைக்குள் முடிவை அறிவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பானைச் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் மதிமுக- வுக்கு பம்பரம் சின்னத்தை மறுப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், விசிக 6 மாநிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவ்வாறிருந்தும் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்சமான செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சின்னங்களை மறுப்பதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைக் கண்டு பாஜக அச்சம் அடைந்திருப்பது நன்றாக தெரிவதாகவும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, வியாழனன்று காலை தில்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட விசிக முடிவு செய்துள்ளது.