tamilnadu

img

சென்னை மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்ட இளைஞர் உயிரிழப்பு  

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

‘கிரேட் இந்தியன் கேதரிங்’ என்ற நிகழ்ச்சியை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மண்டோரா கோரா என்ற உலகப்புகழ் பெற்ற நபரால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் டிஜே நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று இரவு சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மாலில் மது விருந்துடன் கூடிய டிஜே நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கு எந்தவித முறையான அனுமதியும் காவல்துறையிடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த மது விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்(23) என்பவர் தனது நண்பர்களுடன் கலந்துகொண்டார். பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தபோது பிரவீன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததாக  தெரிவித்துள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.  

இதுகுறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை செய்ததில் தனியார் மாலில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது போலீசாருக்கு தெரியவந்தது.  இதனை அடுத்து அரும்பாக்கம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விக்னேஷ், மார்க், பரத் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மது விருந்தில் பரிமாற வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.   

;