tamilnadu

img

பாய்களின் வண்ணம் விற்பவரின் வாழ்க்கையில் இல்லை

“அனைவரும் உறங்க உதவும் பாய்களை உற்பத்தி செய்வோரும், விற்பனை செய்வோரும் நிம்மதியாக உறங்க வைக்கிறதா அந்த பாய் என்றால் இல்லை”. ஒவ்வொருவர் வீட்டிலும் உறங்குவதற்கு உதவுகின்ற பாய்கள் பலவகை உண்டு. ஈச்சம்பாய், கோரைப்பாய், மிருதுவான பிளாஸ்டிக்பாய், சாக்கு, ஜமுக்காளம் என ஏழை மக்களின் வருவாய்க்கு ஏற்ப பல வகையான பாய்கள் கிடைத்த காலம் ஒன்று உண்டு. தற்போது பெரிய பெரிய நிறுவனங்களின் மெத்தை வகைகள் இவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பறித்துக்கொண்டன. இதனால் ஈச்சம்பாய் போன்ற சில வகையான பாய்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. ஆனால் அன்று முதல் இன்றுவரை ஒருவகையான கோரையில் தயாரிக்கப் படும் பாய்களுக்கு நிரந்தர இடம் உண்டு.  இந்தக் கோரைப் பாய்கள் கையால் பின்னப்பட்ட நிலையிலிருந்து இயந்திரங்கள் மற்றும் தறி மூலம் பின்னப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு ஜோடி பாய் 200 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வாகனங்கள், சைக்கிள்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு இவை கிராமப்புறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. “முசிறியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இந்த பாய்களை டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றி ஊர், ஊராக சுற்றி விற்பனை செய்து வருகிறோம். முன்பு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை யாகும். இதில் செலவெல்லாம் போக 600 ரூபாய் வரை எங்களுக்கு கிடைக்கும். இரண்டு பேர் உழைப்பை பிரித்தால் தலா 300 ரூபாய் கிடைக்கும். தற்போது கொரோனா பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாத காலமாக வருமானம் இல்லாமல் கடும் சிரமத்தில் இருந்தோம். தற்போது சில தளர்வுகள் அறிவித்ததால் விற்பனைக்கு வந்துள்ளோம்.  ஆனால் முன்பு போல விற்பனை இல்லை. எனவே வருமானம் இல்லாத எங்களைப் போன்ற ஏராளமான பாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்கிறார் ஊர் பெயரிலேயே பஞ்சத்தை வைத்திருக்கும் கரூர் மாவட்டம் கீழ்பஞ்சப்பட்டி யிலிருந்து உளுந்தூர் பேட்டைக்கு பாய் விற்பனை செய்ய வந்த பழனிச்சாமி. சமூகம் உறங்க உதவும் இவர்களின் வாழ்க்கைக்கு அரசு உதவுமா அல்லது வழக்கம்போல் உறங்குமா? -வி.சாமிநாதன்