tamilnadu

img

சென்னை புத்தக காட்சி பொருநை நாகரிகத்தை பறைசாற்றும் அரங்கம்

சென்னை, மார்ச் 4-
தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்குமான பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை புத்தகக் காட்சியில் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக காட்சியில்  அரசு மற்றும் பல்வேறு பதிப்பகத்தினருடைய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ளும் வகையில் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் அந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலி வடிவிலும் அதை கேட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தமிழ் பண்பாட்டின் தொட்டில் என்றால் அது மிகையல்ல.
பொருநை ஆற்றங்கரை நாகரீகம்!
அந்த அரங்கில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, முதுமக்கள் தாழி மற்றும் ஈமச்சடங்கு மண்கலன்கள் அங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதோ அதேபோல் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதுபோல் அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வாள்கள், கோடாரிகள், குத்து வாள்கள், உளிகள், அரிவாள், கொரண்டி, மண்வெட்டி, வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
அங்கு கண்டெடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மண்பாண்ட ஓட்டின் மாதிரிகள், வெண்கலத்தினாலான பெண் உருவ மாதிரி, சுடுமண் கொள்கலன்,  குவார்ட்ஸைட் அம்மிக்கல், ஈமச்சடங்கு மண்கலன்கள், சுடுமண்ணால் ஆன மூடி, கத்திகள், வாள்களின் துண்டுகள், செப்பு மோதிரங்கள், தேய்ப்பு கற்கள், கல்லெறி குண்டுகள், கற்கருவிகள், தீட்டுக்கற்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் சக்கரங்கள் ஆகியவையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட மண்பாண்ட ஓடுகள், சுடுமண் பொம்மைகள், புகைப்பான்கள், சுடுமண்ணால் ஆன மணிகள், யானை தந்தத்திலான பொருட்கள், எலும்பு மணிகள், எலும்பு கூர்முனை, உருக்கலன்கள், படையல் மண்பாண்டங்கள், தாங்கி மற்றும் மூடியுடன் கூடிய கிண்ணங்கள், சங்கு, சங்கு வளையல்கள், சங்கு மோதிரம், கண்ணாடி வளையல்கள், காசுகள், சீன நாட்டு பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய மண்பாண்டங்கள், முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள்,  மெருகேற்றப்பட்ட ஜாடி, இரும்பு ஆணி, ஆபரணப் பொருட்கள், தக்கிளி, எலும்பு முனைகள், ஆட்டக்காய், அரைக்கும் கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் பார்வையாளர்களுக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் உள்ளன.
- அம்பத்தூர் எஸ்.ராமு