தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது குறித்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு நாள் விழா நடைபெற்றது. விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கியில் சில அலுவலர்கள் எழுந்து நிற்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அலுவலர்களிடம் ஒரு தரப்பினர் விளக்கம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வங்கி அதிகாரி வாதிட்டார்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி அலுவலர்களின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னை காவல்துறையினரிடம் ஆன்லைன் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.எம்.சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து நேற்று நடந்த சம்பவம் குறித்து இன்று மாலை விரிவான அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.