tamilnadu

img

சென்னை - பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை  

மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை – மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அதனை தொடர்ந்து, அவரது வீட்டை சோதனை செய்தபோது, மாணவி உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் சிக்கின. “அதில் 2 கடிதங்களில் ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.    

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில் முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறும்போது, எங்கள் மகள், இதற்கு முன்பு தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகன்தான் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.        

இதன்படி மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும்  சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;