மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள்
அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ. வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய முதல் நாள் (14.3.2022) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
இந்தியாவில் இடம் கிடைக்காமல், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தும் நிர்வாகம் கேட்கும் கட்டணம் செலுத்த இயலாமல் வெளிநாடுகளில் எங்கெல்லாம் இதைவிட குறைவான கட்டணத்தில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்திய மாணவர்கள் செல்கின்றனர். உக்ரேன் போன்று அந்நாடுகளில் போர் அல்லது உள்நாட்டு நெருக்கடிகள் போன்ற அசாதாரண சூழல் ஏற்படும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
தற்போது உக்ரேனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்களை விரைவாகவும், பந்திரமாகவும் மீட்டுக் கொண்டு வர தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி, முதல் அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது ஆகியவை அவர்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. இருப்பினும் படிப்பு தொடர்வது குறித்த நிச்சயமற்ற சூழலில் உள்ளனர். அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு.
எனவே, மருத்துவக் கல்லூரிகளில், கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் இடங்கள் தொடங்க அனுமதி வழங்கிட தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் (NMC Act) கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளைப் பயன்படுத்தி, அவசியம் ஏற்படின் விதி திருத்தங்களை மேற்கொண்டு, ஒரு முறை சிறப்பு நிவாரணமாக (one time special relief) போரினால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு அவரவர் படிக்கும் அதே ஆண்டில் அவர்களின் கல்வியை இந்தியாவில் தொடர்ந்து, படிப்பை முடித்து மருத்துவராக பணிபுரிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, அத்தகைய வாய்ப்புள்ள மாநில அரசு கல்லூரிகளை அடையாளம் கண்டு, தேவை ஏற்பட்டால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தந்து தமிழக மாணவர்கள் நமது மாநிலத்திலேயே படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து, எந்தெந்த ஆண்டில் எத்துணை மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், வாய்ப்புள்ள கல்லூரிகள் எவை என்பதை ஆய்வு செய்து, உரிய அனுமதியை ஒன்றிய அரசிடம் பெற்றிட வேண்டும். அதே போல் பிற படிப்புகள் படிக்கவும், அந்தந்தப் பல்கலைக்கழகம் மற்றும் உரிய அமைப்புகளிடம் சிறப்பு அனுமதி பெற்று விதிகளைத் தளர்த்தி மாணவர்களை சேர்க்கலாம்.
மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதில் காட்டிய கவனத்துக்கு ஒப்பாக, அவர்கள் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.