தமிழ்நாட்டில் நிலவும் சாதக மான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ் நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் தார். ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைநகர் மாட்ரிட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரை யாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்கு கிறது. எட்டு பார்ச்சூன் 500’ நிறுவனங்கள் மற்றும் 20 பார்ச்சூன் 2000’ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படு கின்றன.
தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள் ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தி யாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங் களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கெஸ்டாம்ப் கமேசா ரோக்கா உர்பேசர். இன்கிமம். ஆம்ப்போ. பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். 130க்கும் மேற்பட்ட ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.
இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ் நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர்சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.” இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.