tamilnadu

img

லஞ்சத்தில் மூழ்கியிருக்கும் டாஸ்மாக் மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 24 - லஞ்சத்தில் மூழ்கியிருக்கும் டாஸ்மாக் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி தலைமையில் புதனன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லஞ்ச புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சென்னை முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் 7 மாவட்ட மேலாளர்கள், மண்டல பறக்கும் படை அலுவலர்களின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் அதிகாரி களுக்கு மாமூல் வசூலித்து கொடுக்கும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னையை போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விற்பனைத் தொகையை கடைகளுக்கு நேரடியாக சென்று நிர்வாகமே வசூல் செய்ய வேண்டும், டாஸ்மாக் கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பணிநிரவல் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களின் மருத்துவ சிகிச்சை நிதி, பெட்டிகேஷ், போக்கு வரத்து படி, மின்சார காப்புத்தொகை போன்றவற்றை நிலுவையில்லாமல் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு காலதாமதமின்றி பணப்பலன்களையும், பணிக்கொடையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்த ப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், திருவள்ளூர் மாவட்ட சிஐடியு செயலாளர் கே.ராஜேந்திரன், சங்க நிர்வாகிகள் ஜி.சதீஷ், கே.பி.ராமு, எம்.ஏ.சரவணன், ஜி.சந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள் கே.கேசவன், வி.எஸ்.பன்னீர்செல்வம், என்.ராமச்சந்திரன் உட்பட ஏராளமான ஊழியர்கள்  கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் இ.பொன்முடி கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மாதாந்திர மாமூல், கடை ஆய்வு, பணியிட மாறுதல், பணி நியமனம், விற்பனையாகாத சரக்குகள் கொள்முதல், வாடிக்கையாளர் விரும்பாத சரக்குகளை கடை களுக்கு திணித்தல், சட்ட விரோத மாக பார்களை அனுமதித்தல் போன்றவை மூலம் மாதம் சுமார்  ரூபாய் ஒரு கோடி லஞ்சமாக வாங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டு காலத்தில் அப்போதிருந்த முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி லட்சக்கணக்காண ரூபாய் கைப்பற்றப்பட்டு, மண்டல மேலாளர்கள் கைது செய்யப்பட்ட னர். இப்படி இருந்தும், எந்தவித பயமுமின்றி அதிகாரிகள் துணிச்சலு டன் லஞ்சம் பெறுகின்றனர்.  சென்னை மண்டல அதிகாரி களின் சட்டவிரோத, முறைகேடு களை மூடி மறைக்கும் விதமாக கடை ஊழியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் முறைகேடுகளில் ஈடுபடும் மேலா ளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர்களை திரட்டி சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர் கூறினார்.