tamilnadu

img

இழிவாக பேசும் மாநகராட்சி அதிகாரிகள் கொந்தளிப்பில் களப்பணியாளர்கள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை அதிகாரிகள் இழிவாக நடத்துகின்றனர். ஊதிய நிலுவை கேட்கும் ஊழியர்களை மிரட்டுகின்றனர் என்று சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். களப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் தினசரி 5 முதல் 10 தெருக்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதாக என்பதை ஆய்வு செய்கின்றனர். அறிகுறி தென்பட்டால் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்கின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வர்களை கண்காணித்தல், அவர்களை தினசரி 3 முறை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை செய்தல், மருந்து வழங்குதல், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் என களப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையாக ஊதியம் அளிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மாநகராட்சி அதிகாரிகள் களப்பணியாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், பேசுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் களப்பணியாளர் ஒருவர் கூறுகையில், தினசரி ஒருவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு கட்டயாம் அழைத்து வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களை எப்படி சோதனைக்கு அழைத்து வர முடியும்? யாரையும் அழைத்து வராவிட்டால் வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

மரியாதை குறைவாக பேசுகின்றனர். குறிப்பட்ட பகுதியில் யாருக்கும் அறிகுறியும் இல்லை. அந்த பகுதியில் இருந்து தனியார் பரிசோதனை, மருத்துவமனைக்கும் சென்று ஒருவரும் பரிசோதித்துக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது எப்படி பரிசோதனைக்கு அழைத்து வர முடியும்? ஒரு வாரமாக யாரையும் அழைத்து வராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டுள்ளார்கள். மதியம் 2 மணி வரை வேலை செய்த பிறகு ஆப்சென்ட் போடுகிறார்கள். இதனை எதிர்த்து கேட்டால் மரியாதை இன்றி அவதூறாக பேசுகின்றனர். இது தொடர்பாக மண்டல அலுவலரிடம் புகார் செய்தோம். அதன்பிறகு களப்பணியாளர்களை அதிக டார்ச்சருக்கு உள்ளாக்குகின்றனர். நன்றாக பணியாற்றிவர்களை கூட நிறுத்திவிட்டார்கள். இவ்வளவையும் தாங்கிக் கொண்டு கடுமையான பணி செய்யும் ஊழியர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்காமல் உள்ளனர். ஊதியம் கிடைத்ததும் பல பேர் வேலையை விட்டு நிற்கப்போவதாக கூறி வருகின்றனர் என்றார். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?