tamilnadu

img

விளையாட்டு செய்திகள்

மீண்டெழும் பீனிக்ஸ் பறவை !

“நடராஜன் ஒரு பணிவான மனிதர். எப்போதும் அவரது உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. உண்மையில் அவர் ஒரு கடின உழைப்பாளி. அவரை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்!”

-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்.

சேலம் எக்ஸ்பிரஸ்...
நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி  அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிரட்டலாக பந்து வீசி அசத்தலாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய தங்கராசு நடராஜன், தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தில் பிறந்த இளைஞர். 

தள்ளுவண்டியில் தின்பண்டங்களை விற்று வந்த தங்கராசு-சாந்தா தம்பதி தான் நடராஜனின் பெற்றோர். பின்னர், நூற்பாலையில் தினக் கூலியாக வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர். மேலும், குடும்பத்தின் வருமானத்திற்காக மாநில நெடுஞ்சாலையில் சாலையோர உணவகத்தை இரவு நேரத்தில் நடத்தி வந்தனர். 

2014-15 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணியில் அறிமுகமான நடராஜனை  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அன்றைக்கு வயது 24. அசத்தலான பந்து வீச்சால் அடுத்த ஆண்டு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது.

‘யார்க்கர் கிங்’
இடதுக்கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக பந்துவீசி மிரட்டினார்.

குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில்  துல்லியமாக குறைந்தது 10 யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்தியாவில் மட்டுமல்ல உலகின் நட்சத்திர வீரர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக  அவரது யார்க்கர்கள் பெரிதும் பேசப்பட்டன. 

சாதித்துவிட்டாய் என் அன்பே !
தனது 29 ஆவது வயதில் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதன்முதலாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் களம் இறங்கிய நடராஜன், துல்லியமான பந்து வீச்சுகள் மூலம் ஸ்டாம்புகளை தகர்த்து விக்கெட் வேட்டையை தொடங்கினார். தனது அசத்தலான பந்து வீச்சால் மேலும்  விக்கெட்டை பறித்தார். அதுவே அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற அடி கோலியது.  அதைத் தொடர்ந்து, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார்.

ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் தோற்றது. இந்திய அணி போட்டியை வென்றது. 

சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கிய நடராஜனின் கிரிக்கெட் பயணம்,  தொடரில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளானது. தனக்கே உரித்தான யார்க்கர் பந்து வீச்சு மூலம் உலகின் முன்னணி வீரர்களையும் தடுமாற செய்தார்.

இந்திய நாட்டுக்காக முதன்முதலாக கிரிக்கெட் விளையாடியதை பார்த்த நடராஜனின்  தாயார்,”நீ சாதிச்சிட்டடா ராசா”என்று உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் விட்டார். மகன் புதிய உச்சத்தை எட்டினாலும், தங்கராசுவும் சாந்தாவும் உணவு வியாபாரத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை.

கனவு காணுங்கள்! 
கிரிக்கெட் கனவுடன் வளம் வந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையாக மிளிர்ந்து கொண்டு வருகிறார். தன்னைப் போலவே பலரும் சாதிக்க வேண்டும் என தனது சொந்த ஊரிலேயே கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைத்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவு கண்டாலும் குடும்ப சூழல் கை கொடுக்காத இளைஞர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறார்.

படிக்கும்போதே “கையில பேட்டும் பந்துமா சுத்திக்கிட்டு வந்தவர் நடராஜன். அன்றைக்கு, நீ எல்லாம் பெரிய ஆளா வர முடியாது” என்று சொன்னார்கள். இதுபோன்ற பேச்சுக்கள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் காட்டினார். எந்தத் துறையை தேர்வு செய்கிறோமோ அதில் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் பயணித்தார். இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. அன்றைக்கு, “எனக்கு அப்பவே தெரியும் இந்த பையன் பெரியாளா வருவான்னு” என்று பெருமையாக சொன்னார்கள்”. இதுதான் உலகம்.

அதேநேரத்தில் படிப்பும் ரொம்ப முக்கியம் என்பதையும் அவரது அனுபவம் உணர்த்தியது. காரணம், மொழி. இதற்காக படாத பாடு பட்டிருக்கிறார். அதனால்தான், செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை விளையாடவும் படிக்கவும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அத்தோடு கனவுகளை நோக்கியும் ஓடினால் தான் அடைய முடியும் என்பதை பதிவு செய்ய தவறுவதில்லை நடராஜன்.

துரத்தியது காயம் !
சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜனின் பயணம் நான்கு மாதமே நீடித்தது. இங்கிலாந்து தொடரில் 10 ஓவர்களில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்தும் விக்கெட் கிடைக்கவில்லை. அதற்குள் 2021 ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளோடு காயம் காரணமாக வெளியேறினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக் குறியாக மாற்றியது. இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புகளும் பறிபோனது. 

அதன் பிறகு மீண்டு வந்த அவர், 2022 சீசனில் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனில் ஆட முடியாமலே போய் காயங்களிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடராஜன் மீண்டும் தனது துல்லியமான யார்க்கர்களை இறக்க ஆரம்பித்திருக்கிறார். பவர்ப்ளேயிலிருந்து டெத் ஓவர் வரை எல்லா இடங்களிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். பெரும்பாலான போட்டிகளில் வீசுகின்ற முதல் ஓவரிலேயே விக்கெட்டையும் வீழ்த்தி விடுகிறார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு ‘கம்பேக்’ கொடுத்துள்ள நடராஜன், மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார். அடுத்தடுத்து ஆட்டங்களில் தனது யார்க்கர் பந்துக்கள் மூலம் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- சி. ஸ்ரீராமுலு

விரைவில் 120 பந்துகளில் 300 ரன்கள் விளாச வாய்ப்பு உருவாகலாம்

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 அன்று தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத், தில்லி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடர் தற்போது நடு கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், பேட்டர்களின் அதிரடி ஆட்டத்தால் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறந்து வருகிறது.

பொதுவாக ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் 120 பந்துகளுக்கு (20  ஓவர்கள்) 200 குவிப்பது மிக கடின மான இலக்காக இருந்தது. 2013இல் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயிலின் அதிரடி சதத்தால் பெங்களூரு அணி  263 ரன்கள் குவித்தது. இதுதான் கடந்த 11 ஆண்டு களாக ஐபிஎல் அணியின் தனிப்பட்ட சாதனை ரன் குவிப்பாக இருந்தது. இது எதிர்பாராவிதமாக நடந்த சம்பவம்  என்று தற்போது வரை கிரிக்கெட் ரசிகர் களால் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போதைய காலகட்டத்தில் இளம் வீரர்களின் பயமில்லா அதிரடியால்  250 ரன்களை கடப்பது மிக எளிதான காரியம் ஆகிவிட்டது. பவர்பிளேவில் (முதல் 6 ஓவர்) ஓரளவு ரன்கள் குவித்து  விட்டால் அசால்ட்டாக 250 ரன்களை  கடந்து விடும் நிலைமை உருவாகி யுள்ளது. 

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் ஹைதராபாத் அணி 3 முறை (287,277,266)  250 ரன்களை கடந்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 15 அன்று தில்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் போட்டி களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஹைதராபாத் அணி மட்டுமின்றி கொல்கத்தா (272), பெங்களூரு (262) அணிகளும் நடப்பு சீசனில் 250 ரன்களை கடந்துள்ளது. 

இளம் வீரர்களின் பயமில்லா ஆட்டத் தால் இனி வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களுக்கு 300 ரன்களை கடக்க வாய்ப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாட்ரிட்
ஓய்வு பெறுகிறார் முகுருசா

டென்னிஸ் உலகில் அதிரடிக்கு  பெயர் பெற்ற நட்சத்திர  வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பைன் முகுருசா(30) சர்வதேச டென்னிஸ் தொடர்களில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

வெனிசுலாவில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் வளர்ந்து, ஸ்பெயின் நாட்டிற்காக கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வரும்  கார்பைன் முகுருசா  மற்ற வீராங்கனைகளை காட்டிலும்  சற்று வித்தியாசமான அதிரடி ஆட்டத்திற்கு  பெயர்  பெற்றவர். அதாவது ரிவர்ஸ் ஷாட்களை  அதிகம் விளாசாமல்,  எந்த நிலையிலும் திரும்பும்  பந்தையும் நேரடியாக ஆக்ரோஷமாக அதே வேகத்தில்  திசை திருப்பும் திறன்  பெற்ற முகுருசா 2016இல் பிரெஞ்சு ஓபன், 2017இல் விம்பிள்டன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரையும் கைப்பற்றினார். மேலும் 2017இல் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையாக நீண்டகாலம் இருந்தார். 

இந்நிலையில், 30 வயதான முகுருசா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக லாரஸ்  விருது வழங்கும் நிகழ்வில் அறிவித்துள்ளார். 

ஐபிஎல் 2024
இன்றைய ஆட்டங்கள்

ராஜஸ்தான் - மும்பை
(ஆட்டம் - 34)
இடம் : சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (இலவசம்)