tamilnadu

img

சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி: 11 பேர் கைது  

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக 11 பேரை செய்ததாக அமலாக்கத்துறை புதன்கிழமை அறிவித்தது.  

சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்தது. டெபாசிட் செய்த 3 நாள்களுக்கு பிறகு கணேஷ் நடராஜன் என்பவர், சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என்று ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வங்கியில் தாக்கல் செய்து ரூ.100 கோடியை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என கூறினார்.  

அதனைதொடர்ந்து இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்றிய பின்னர் பணம் 34 வங்கி கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டது.  இதையடுத்து சென்னை துறைமுகம் வைப்பு நிதியாக செலுத்திய ரூ.100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது துறைமுக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இந்நிலையில் வங்கி நிர்வாகம், பண பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. அதற்குள் ரூ.45 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.   இந்த வழக்குத் தொடர்பாக மத்திய ஆப்பரிக்க நாடான கேம்ருனைச் சேர்ந்த பெளசிமா ஸ்டீவ் பெர்டிரன்ட் யானிக், காங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்ஸா இலுங்கா லூசின் உள்பட 15 பேரை சிபிஐ கைது செய்தது.  

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை செய்தது. மேலும் வழக்கு தொடர்பாக மாநிலம் முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத்துறையும் சோதனை செய்தது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்ட 230 ஏக்கர் நிலம், வீட்டுமனைகள், வாகனங்கள், தங்கநகைகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் முடக்கியது.

அதனைதொடர்ந்து இந்த வழக்கில் ஏற்கெனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட முக்கிய 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இதில் பி.வி.சுடலை முத்து, மணிமொழி, கணேஷ் நடராஜன், ஜெ.செல்வகுமார், கே.ஜாகிர் உசேன், எம்.விஜய் ஹெரால்டு, எம்.ராஜேஷ் சிங், எஸ்.செய்யது, சுரேஷ்குமார், ஏ.சேர்மதிராஜா, அருண் அன்பு ஆகிய 11 பேரை கைது செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேறகொண்டு வருகிறது.