எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும்
சென்னை, ஜூன் 13- எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக, தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும். எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும். எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். அதேபோல், குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும்.
கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்
தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும். மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14-ம் தேதி வரையும், மன்னார்குடி – ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலை யத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். பயணிகள் பயணத்திற்கு முன் திருத்தப்பட்ட நேரம் மற்றும் ஏறும் இடங்களை சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.