tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்.....

சென்னை:
மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அரசு இணையதளம் மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதல்வர் தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்போது, மருந்துவிற்பனை செய்யப்படக்கூடிய இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப்படும் மருந்து தவறான முறையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், மருத்துவமனைகள் மூலமாகஅதனை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.இதன்படி, கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து, ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவுசெய்யும் மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை,கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.

இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்தமருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.இதனை முதல்வர் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் மே 19 அன்று தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் ஐ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பு.உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;