சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த தாம்பரம் சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை தலைமை அலுவலகம் சிறப்பு குழு ஒன்று அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தொடர்ந்து பல சார்பதிவாளர்கள் சிக்கி, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்ரமணியன் என்பவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சர்வே எண் 392/1, தாம்பரம் பகுதியில் வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை எட்டு விதமான பத்திரப்பதிவு மூலம் போலியான ஆவணங்கள் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
குறிப்பாக, இரண்டு விற்பனை பத்திரம் மற்றும் 6 செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்து வனப்பகுதிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.