tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் உயரும்”

திருப்பூர்,டிச.17- வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் உயரும் என்று ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  2025 முதல் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயரும். தற்போது அமெரிக்காவில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வருகின்றன என்று தெரிவித்தார்.

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால்  குத்தியவருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை,டிச.17- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கடந்த மாதம் அங்கு சிகிச்சை பெற வந்த  நோயாளி ஒருவருடன் வந்திருந்த இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்,  விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  

இரட்டை இலை சின்னம் விவகாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுதில்லி,டிச.17- அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில்  ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை  இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் டிசம்பர் 4 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான புகழேந்தியின் பல மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. தில்லி உயர்நீதிமன்றமும் புகழேந்தியின் மனுக்களை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தியை, டிசம்பர் 24 அன்று  காலை 11 மணிக்கு நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பழனி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலந்தாய்வு 

சென்னை,டிச.17- பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் செயல்படுத்தப்படும் பெருந்திட்ட வரைவு – 2 (Master Plan – Phase 2) குறித்து கலந்தாய்வுக் கூட்டம் டிசம்பர் 17  அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவானது செயல்படுத்தப்பட உள்ள 58.75 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்களுக்கான தங்கும் அறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, உணவகங்கள், பூங்காக்கள், முடிகாணிக்கை மண்டபம், நீரூற்றுகள், சிறுவர் பொழுது போக்கு பூங்கா, முருகனின் பெருமைகளை பறைசாற்றும் ஆன்மிக அருங்காட்சியகம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமைந்திட வேண்டும். அதற்கேற்றார்போல் வடிவமைப்புகளை உருவாக்கி திட்டமதிப்பீட்டினை விரைந்து தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேட்டூர்  நீர்மட்டம்   118 அடியாக உயர்வ

மேட்டூர், டிச.17-  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ள நிலையில், இந்த ஆண்டில் 3 ஆவது முறையாக அணை நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  செவ்வாயன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 148  கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இத னால் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக உயர்ந்தது.  அணையில் இருந்து பாச னத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.  அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ள ளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, டிச.17-  ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்  தகுதியான தனித்தேர்வர் களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

 இணையதளம் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர்17 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலை யில், தொடர் கனமழை கார ணமாக தேர்வர்களின் நலன் கருதி, வருகிற 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை தெரி வித்துள்ளது. 

குட்கா  வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

சென்னை,டிச.17- குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை பென் டிரைவில் வழங்கக் கோரிய ஐபிஎஸ் அதிகாரி யின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட் டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென் னை சிறப்பு நீதிமன்றம் தள்ளு படி செய்து உத்தரவிட்டது.