tamilnadu

நீட் தேர்வினை உடனே ரத்து செய்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜுன் 6-மூன்றாண்டுகளில் மொத்தம் ஆறு மாணவிகளின் உயிரைப் பறித்துள்ள நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஜுன் 6 வியாழனன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை வருமாறு:

நீட் : மோடி, எடப்பாடி கூட்டுச்சதி
நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு ள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைசியா தீக்குளித்து மாண்டுள்ளார். விழுப்புரம் மாணவி மோனிஷாவும் தற்கொலை செய்துள்ளார். இம்மாணவிகளின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டுகளில் மூன்று மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஒரே ஆண்டில் மூன்று மாணவிகள் உயிர் பறிக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இம்மரணங்கள் தற்கொலை என்றாலும் உண்மையில் மத்திய அரசின் மருத்துவ கல்விக் கொள்கையால் நடத்தப்படும் படுகொலைகளே.தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசு இதனை செவிமடுக்காமல் பிடிவாதமாக நீட் தேர்வை நடத்தி வருவதால் மாணவிகளின் உயிர் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இக்கொடுமைகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு, தங்களது ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வருகிறது.  இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களை ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்திட எடப்பாடி அரசு தயக்கம் காட்டி வருகிறது.மோடி - எடப்பாடி அரசுகளின் கூட்டுச் சதியினால் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு தகர்ந்து கொண்டுள்ளது. பல உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. எனவே, உடனடியாக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன் குடியரசுத் தலைவரது ஒப்புதலுக்கு காத்திருக்கும் இரண்டு மசோதாக்களுக்கும் தாமதமின்றி ஒப்புதல் வழங்கிட வேண்டுமென மத்திய-மாநில அரசுகளை வற்புறுத்துவதோடு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை உறுதி செய்திட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்று திரண்டு மீண்டும் களம் காண வேண்டுமென  கேட்டுக்கொள்கிறோம்.

மாணவிகளது மரணத்தால் துயருற்றுள்ள அவர்தம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது குடும்பங்களுக்கு ரூபாய் ரூ.50 லட்சம் நிவாரணத்தொகையினை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.மாணவ-மாணவிகள் இத்தகைய கொடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும்  ஒன்றுபட்டு போராடி நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற அணிதிரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நிறை வேற்ற வேண்டும்.மாநிலங்களில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதமான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு பெறுகிறது. இவ்வாறு பெறும் 4600 மருத்துவ இடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து 490 இடங்கள் அளிக்கப்படுகின்றன.  அகில இந்திய அளவில்ஒதுக்கீட்டில் உள்ள மேற்கண்ட 4600 இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடும் மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிதமான இடஒதுக்கீடும் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், மண்டல்கமிசன் சிபாரிசு அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு அமல்படுத்த மறுப்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, நடப்பாண்டில் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை கட்டாயம் அமல்படுத்த வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசின் இந்த அநீதியை எதிர்த்து எடப்பாடி அரசு குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மும்மொழித் திட்டத்தை கைவிட வற்புறுத்தல்
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் மும்மொழித்திட்டம் அமலாக்கப்படுமெனவும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வலுவான எதிர்ப்புக்குரல் எழுந்ததன் விளைவாக தற்போது இந்தி உள்பட ஒரு மொழியை விருப்பப்பாடமாக படிக்க வேண்டுமென மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று அறிவிப்பு பின்வாசல் வழியாக இந்தியைகட்டாயப் பாடமாக்கும் முயற்சியென சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி கட்டாயமெனவும், மூன்றாவது மொழியாக ஒரு மொழியை விருப்பப் பாடமாக கொள்ள வேண்டும் எனக்கூறுவது மும்மொழித்திட்டத்தை திணிப்பதாகும். இன்றுள்ள நிலையில்,மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வைப்பதற்கான மறைமுக சதித்திட்டமாகும். ஏற்கனவே நீண்டகால மாக தமிழகத்தில் இருமொழிக் கொள்கை வெற்றிகரமாக அமலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிமாணவர்களை மும்மொழித் திட்டத்தின் மூலம் மூன்றாவது மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்து மென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாணவர்கள் தாங்களாகவே விரும்பி, எந்த மொழியையும் கற்பதற்கு தற்போது தடையில்லை. ஆனால், மும்மொழி திட்டமென்ற பெயரில் எந்த மொழியையும் மாணவர்களிடம் திணிக்கக்கூடாது.

எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வற்புறுத்தல்
ஏற்கனவே விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்து வரும் எட்டுவழிச்சாலையையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் மத்திய - மாநில அரசுகள் மீண்டும் திணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட எட்டுவழிச்சாலை அரசாணைக்குதடை கோரியும் அதனை ரத்து செய்யக் கோரியும் தேர்தல்முடிவுகள் வந்த மறுநாளே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை யும் நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. எனவே, இத்திட்டங்களை மக்களுக்கு விரோதமாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வற்புறுத்துவதோடு இத்திட்டங்களை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜுன் 5ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பிரச்சாரக்குழுக்கள் டெல்டா மாவட்டங் களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க!
மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  பத்து  நாட்களுக்கு ஒருமுறை, மிக குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது. சென்னை மாநகரில், மாநகராட்சி தண்ணீர் விநியோகம் 90 சதமான பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட  போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் குடிநீர் பஞ்சத்தை போக்க நிரந்தர திட்டங்களை வகுத்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், பாசன வடிகால் வாய்க்கால்களை சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வாரிட வேண்டும். மாநகர் முதல் கிராமங்கள் வரையில் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்க தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

;