tamilnadu

img

உயர்மின் கோபுர திட்டம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக!

தமிழ்நாட்டில் பவர்கிரீட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்களால் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதில் ஏராளமான விவசாயிகள் நில மதிப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து மின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். பல மாவட்டங்களில் திட்டப்பணி நடந்து வரும் நிலையில், தொழில் துறை அரசாணை எண் 54 இன் படி பயிர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். துறவி கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். கம்பம் எழுந்த இடம், கம்பி செல்லும் இடங்களுக்கு, கிராமத்தின் அதிகபட்ச சந்தை மதிப்பீட்டை கணக்கில் கொண்டும், 2013 நிலை எடுப்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இழப்பீடு தொகையோடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு உட்பட உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.