tamilnadu

img

விக்டோரியா கௌரியை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற விக்டோரியா கௌரியை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்த விக்டோரியா கௌரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார். இந்த நிலையில், விக்டோரியா கௌரியின் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றம் வளாகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிவகுமார், சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் விக்டோரியா கௌரி என்றும், உச்ச நீதிமன்ற கொலிஜியம் விக்டோரியா கௌரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்திருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் எதிராக இருக்கிறது என்றும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நம்பிக்கை ஏற்படும் வகையில் நீதிபதிகளை பரிந்துரை செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. விக்டோரியா கௌரி போன்றவர்களை நியமித்தால் நீதிமன்றத்தில் நாடிவரும் சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகும் என குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விக்டோரியா கௌரியின் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.