tamilnadu

img

சிகிச்சை கிடைக்காமல் கர்ப்பிணி மரணம் - விசாரணைக்கு உத்தரவிடுவதாக ஆணையர் உறுதி

சென்னை, ஏப்.17- சிகிச்சை கிடைக்காமல் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகர ஆணையர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்த தலித் பெண் ஜனகவள்ளி (வயது-28) உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனையில் காலமானார். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், உயிரிழந்த ஜனகவள்ளி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், கருணை அடிப்படையில் அவரது கணவருக்கு அரசு வேலையும் வழங்க கோரியும் பெருநகர சென்னை  மாநகராட்சியின் ஆணையர் அவர்களை இன்று (17.04.2023) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, 98ஆவது வட்ட கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷின் இறந்த பெண்ணின் கணவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட ஆணையர், கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகர ஆணையர் உறுதி அளித்தார். விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு :

பெருநகர சென்னை மாநகராட்சி, 77ஆவது வட்டம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ம.கோட்டீஸ்வரன் மனைவி ஜனகவள்ளி (வயது-28) 06.04.2023 காலை சுமார் 10.30 மணியளவில் பிரசவத்திற்காக புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சமுதாய நல மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லாததாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஜனகவள்ளி இறந்துள்ளார். அவர் இறந்த செய்தியை மறைத்து ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே மருத்துவமனை நிர்வாகம், ஜனகவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஜனகவள்ளியின் உறவினர்களும், கே.பி.பார்க் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் அவர்கள் “ஜனகவள்ளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையான சிகிச்சையா? என விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய சட்ட நடவடிக்கையினை தொடர மருத்துவக்குழு அமைத்து விசாரணை அறிக்கை அளிக்க” மருத்துவக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

உரிய மருத்துவ சிசிச்சை கிடைக்காமல் இறந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஜனகவள்ளி பி.எஸ்.சி (டிஎம்எல்டி) பட்டதாரி ஆவார். அவருக்கு 3 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரது கணவர் ஆட்டோ ஓட்டுநர். இத்தகைய நிலைமையை கவனத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான நேரத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உயிரிழந்த ஜனகவள்ளி குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடும், கருணை அடிப்படையில் அவரது கணவருக்கு அரசு வேலையும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.