tamilnadu

img

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டிக்கு போலீசார் வலைவீச்சு!

பெண்ணை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில், தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது சித்ரா நகரிலிருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஆண்டாளுக்கும், பா.ஜ.க மகளிர் அணியை சேர்ந்த நிவேதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 21 ஆம் தேதி இரவு பா.ஜ.க பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூர் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளிட்டோர் ஆண்டாள் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து அவர் மீதும், அவரது சகோதரி தேவி மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 
இதை அடுத்து ஆண்டாள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.