தியாகதுருகம் ஒன்றியத்தில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி
கள்ளக்குறிச்சி, ஆக. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசின் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஒவ்வொரு வட்டார பகுதிகளில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பெரிய மாம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படத் தொகுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தி இருக்கும் அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்படத் தொகுப்புகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதுபோன்ற அமைக்கப்படும் புகைப்படக் கண்காட்சிகள் மூலம் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பொதுமக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.