சென்னை, ஜன. 10 - சமூக ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்துங்கள் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கூறினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் 4ஆவது மாநில மாநாடு (ஜன.9) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதன் சுருக்கம் வருமாறு: இஸ்லாமியர்களின் அடக்கஸ்தல மான கபர்ஸ்தான், இல்லாத ஒன்றியங்களில் அரசே நிலத்தை கையகப்படுத்தி அமைக்க உள்ளது.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 14 வருடங்களுக்கு வேறு எவரையும் அடக்கம் செய்ய முடி யாது. அந்த விதிகளை தளர்த்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு உடல் புதைக்கப்பட்ட இடத்தில் 6 மாதத்திற்கு பிறகு வேறு ஒரு உடலை புதைக்கலாம். மரப்பெட்டிக்குள் வைத்து புதைத்தால் ஓராண்டிற்கு பிறகு, உலோக பெட்டிக்குள் வைத்து புதைத்தால் 3 ஆண்டுக்கு பிறகு அதே இடத்தில் உறவினர்களை புதைத்துக் கொள்ளலாம். இதற்கான ஆணைகள் விரைவில் வெளிவரும். சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு கோரியுள்ளோம். அதையும் முதலமைச்சர் பரிசீலிப்ப தாக தெரிவித்தார்.
ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவது கூட பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறது. வரி விதித்து வருவாயை பெருக்குவது, கல்வி, நிர்வாகம் என அனைத்திலும் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்த அரசால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.
அதற்கு காரணம், ஒன்றிய அரசு முறை யான நிதி ஒதுக்கீட்டை செய்வ தில்லை. அதேபோன்றுதான் ஒன்றிய அரசு தமிழகத்தையும் நடத்துகிறது. மாநில அரசுகள் அனைத்து ஆதாரங் களையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்கின்றன. ஒன்றிய அரசு சுரண்டி வைத்துக் கொண்டு தர மறுக்கி றது. மாற்றுக்கருத்து கொண்ட மாநில அரசுகளை நிர்மூலமாக்கும் வகையில் செயல்படுகிறது. ஜனநாயக நிறுவனங்களான நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்றவற்றிற்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது.
அண்மை காலத்தில் ஒன்றிரண்டு தீர்ப்புகளை தவிர்த்து பெரும்பாலான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அச்ச மூட்டுகின்றன. அரசியல் கட்சிகள் செயல்பட முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தல் எதிர்கால இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உறுதி செய்ய உள்ள தேர்தல். வேறுபடுகிற இடத்தை விட்டு, ஒன்றுபடும் இடத்திலிருந்து இணைந்து செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் விழிப்போடு செயல்படுங்கள். நல்லதை ஆதரி யுங்கள்.
சமூக ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் சுரண்டலற்ற, மதச்சார் பற்ற அரசை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டிற்கு அமைப்பின் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை தாங்கினார். மாநாட்டு வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார். நிதிநிலை அறிக்கையை அகமது ஹூசேன் வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை பொதுச் செய லாளர் தாவூத் மியாகான், இந்திய ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் பா.பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் ஒய்.இஸ்மாயில் நன்றி கூறினார்.
நூல் வெளியீடு
மாநாட்டில் வீ.பழனி எழுதிய ‘பவுத்தம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் ஒப்பீடு’ எனும் நூலை கல்வியாளர் தாவூத் மியாகான் வெளியிட இந்திய ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் பா.பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளராக எம்.ராமகிருஷ்ணன், பொருளாளராக ஒய்.இஸ்மாயில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.