கல்வி மட்டுமே ஒருவரை நாகரீக மனிதனாக மாற்றும் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வேலூர், செப்.6 - விஐடி சென்னையில் 13-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று ( செப்.6 ) நடைபெற்றது. விழா வுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், கோ.வி.செல்வம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணை வேந்தர் முனைவர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். கவுரவ விருந்தினராக சென்னையில் உள்ள வங்க தேச நாட்டின் துணை தூதர கத்தின் துணை தூதர் ஷெல்லி சலேஹின் கலந்து கொண்டனர். இவ்விழாவில், 39 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் உள்பட பட்டங்களை வழங்கி அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், கல்வி திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேராகும். சமூக நீதி, சமத்துவம் என அனைத்தும் அனைவருக்குமான சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ் நாட்டில் அனைவருக்கும் கட்டாய கல்வி தரப்பட்டது. யார் எங்கிருந்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கல்வி அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அதிவேக பொருளாதார வளர்ச்சி ஏற்பட முக்கியமான கார ணம் பெண்களுக்கு கல்வி வழங்கி அவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி புரிவது தான். தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக் கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள். கல்வி என்பது ஒருவரை நாகரீக மனிதனாக மாற்ற வேண்டும். தற்போது வேலை மற்றும் திறனை மேம்படுத்துவது மட்டுமே கல்வியாக இருக்கிறது. அதனை மாற்றி அமைக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சட்டம், வரலாறு, இலக்கி யம் போன்ற துறைகள் இருப்பது மிக முக்கியம். நம் வாழ்வில் எந்த வெற்றியும் நிரந்தரமல்ல, எந்த தோல்வியும் ஈடுசெய்ய முடியாதது அல்ல. எனவே, மாணவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியை பெற்றாலும் பணிவுடன் இருக்க வேண்டும். தோல்வி அடைந்தாலும் துவண்டு போக கூடாது என்று பேசினார். “திறமை மட்டுமின்றி நற்குணமும் நேர்மையும் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற மிகவும் முக்கி யம். வாழ்வில் நிச்சய மற்ற தன்மை இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங் கள், அந்த உணர்வு தான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்” என்று பேசினார். விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது” உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 விழுக்காடு மட்டுமே. அது 50 விழுக்காடாக உயர வேண்டும். அனைவருக்கும் உயர்கல்வி கிடைத்தால் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்தியாவில் தனி நபர் வருமானம் 2800 டாலர்கள் அல்லது 2900 டாலர்கள் மட்டுமே, ஆனால் அமெரிக்காவில் இது 89000 டாலர்கள் மற்றும் ஜப்பானில் 36000 டாலர்கள். நம் மாணவர்கள் படித்து முடித்த பிறகு இந்தியாவில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குங்கள், அப்போது தான் இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக மாறும்" என்று பேசினார். இந்த ஆண்டு பட்ட மளிப்பு விழாவில் 6,468 இளங்கலை, முதுகலை மாணவர்கள் , 113 ஆராய்ச்சி மாணவர்கள் என மொத்தம் 6,581 பேர் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது. விழாவில் வங்கதேச துணை தூதர் ஷெல்லி சலேஹின், விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாக ராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், விஐடி வேலூர் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், விஐடி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாண வர்கள் , பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.