tamilnadu

நாகை, கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஆய்வு

கடலூர்,ஏப்.21- நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார்செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில், காவிரி டெல்டா பகுதிகளில் 40 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம், ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.41 தரமுறைகளின் படி இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கிணறுகள் அமைய உள்ள இடத்தில் நீர் மற்றும் காற்றின் தரத்தை மதிப்பிடுதல், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பயன்கள், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கையாளும் திறன், கழிவு எண்ணெய்யை கையாளும் திறன் உள்ளிட்ட 41 விதிமுறைகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

;