tamilnadu

செய்தித் துளிகள்

சென்னையில் காவல்துறை ஆய்வாளர்கள் 6 பேருக்கு தொற்று

சென்னை மத்திய குற்றப்பிரிவில் வேலை பார்க்கும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு பெண் உதவி ஆய்வாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சாத்தாங்காடு காவல் நிலைய பெண் ஆய்வாளர், மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர், முத்தியால்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர், எண்ணுர் காவல்நிலைய ஆய்வாளர், மதுரவாயல் காவல்நிலைய  ஆய்வாளர் என 6 ஆய்வாளர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 86 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சிறப்பு காவல்படையை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா

சென்னை மந்தைவெளியில் தங்கி ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல்படை போலீசார் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

24 மணி நேரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக திங்கட்கிழமை (மே 11) காலை 9 மணி வரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 15 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 4 லட்சத்து 54 ஆயிரத்து 16 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அபராதமாக 4.92 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 75 ஆயிரத்து 792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 240 வழக்குகள் பதியப்பட்டு 5 ஆயிரத்து 434 பேர் கைது   செய்யப்பட்டுள்ளனர்.  5 ஆயிரத்து 993 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.  அபராதமாக 5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: 5 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 20 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று (மே 11) குன்றத்தூர் பகுதியில் 2, காஞ்சிபுரம், வாலாஜாபாத், மாங்காடு பகுதிகளில் தலா ஒருவர் என 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 2 பேர் பெண்கள் 3 ஆண்கள் ஆவர். இதனையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 106 பேர் சிகிச்சையில் உள்ளனர்

சென்னை: சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவர் திங்களன்று (மே 11) உயிரிழந்தனர்.

கொளத்தூரைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவரும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

சென்னையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான 6 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கன்டோன்மென்ட் கவுன்சிலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளில் மட்டும் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: மேலும் 91 பேருக்கு கொரானா

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்களன்று (மே 11) மேலும் 91 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனித தோமையார் மலை பகுதி 44,  கேளம்பாக்கம் 6,  நந்திவரம் 23,  செங்கல்பட்டு நகராட்சி 3,  மதுராந்தகம் நகராட்சி 2, சட்ராஸ் 3,  பவுஞ்சூர் 2, சூனாம்பேடு4 அச்சரப்பாக்கம் 4 என தொற்று
கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்டத்தில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.