tamilnadu

செய்தித் துளிகள்

6 பேர் மீது வழக்கு

தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட நிர்வாகி செல்வத்தை ரவுடி பட்டியலில் சேர்த்ததை கண்டித்து மார்ச்14ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புதிய பதிவாளர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்த பேராசிரியர் கிருஷ்ணமோகன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பல்கலைக் கழக கல்வியியல் துறைத் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் ஞானதேவன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

காலமானார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கருணாகர நல்லூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கே.பி.குமாரின் தாயார் சந்தானபாக்கியம் (75) காலமானர். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் இளங்கோவன்,  பொன்னம்பலம், ஆனந்தவீரன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி தொற்று பாதிப்பு 3,171

புதுச்சேரியில் புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,171ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 47 பேர் இறந்தனர்.

முழு பொதுமுடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் ஒரே தெருவில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தையடுத்து ஊராட்சி முழுவதும் 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர்  அறிவித்துள்ளார்.

ரத்து செய்க

கொரோனா பொதுமுடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  11 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவை கடலூர் மாவட்ட அனைத்து வாகன உரிமையாளர் வாகன ஒட்டுனர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகள் அளித்தனர்.

கடைகளுக்கு சீல்

வாணியம்பாடி இக்பால் ரோடு, பஷீராபாத், கச்சேரி சாலை, சி.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றாமல் இயங்கி வந்த 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

தொற்று 8 ஆயிரமாக உயரும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா தெரிவித்தார்.