தி.மலையில் தொற்று 352
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று (மே 29) 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது.
3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காப்புகாட்டு பகுதியில் வேட்டையாட முயன்ற ஜமுனாமத்தூரை சேர்ந்த முத்து (55), மேல்அத்திப்பட்டியை சேர்ந்த துரைசாமி (55), ஜெயராமன் (35) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து, 1 நாட்டு கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
எதிர்ப்பு
ஓசூர் அருகே வனப்பகுதியை ஒட்டி சுமார் 33 லட்சம் ரூபாயில் குடிமராமத்து பணியில் நீர் தேக்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கிராம பகுதியில் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்த லாரி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி உயர் மின் அழுத்த கம்பியில் உரசி தீப்பற்றியதில் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது
அணைக்கு நீர் வரத்து
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 640 கனஅடிநீர் வரத்து உள்ள நிலையில் 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 640 கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 40.67 அடிகள் நீர் இருப்பு வைக்கப்பட்டு 640 கனஅடி நீர் அணையின் 3 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கருவேல மரங்கள் அகற்றம்
வேலூர் மாவட்டத்திலுள்ள பாலாற்றில் சீமை கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் வெள்ளியன்று (மே 29) துவங்கின.