tamilnadu

செய்தித் துளிகள்

தி.மலை பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்தது

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தின் மேற்கூரை இரண்டாவது முறையாக திங்களன்று (மே 18) பெயர்ந்து  விழுந்தது. ஏற்கனவே கடந்த 8 ஆம்  தேதியன்றும் இதேபோல் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு: 18 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 555 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 362 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம்: 3 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் 98 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிங்காரவேலன் (வயது 51). தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீடு அருகே உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சிங்காரவேலன் சென்றுள்ளார். தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகிலிருந்த மின் மோட்டாரின் சுவிட்சை அழுத்த முயன்றார். அப்போது மின் மின்சாரம் தாக்கி சிங்காரவேலன் உயிரிழந்தார்.