சென்னை, பிப். 17 - மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டி ருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை; தமிழ்நாடு அனுமதியின்றி எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடக மாநிலத்தால் கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்று தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சட்ட சபையில் முதல்வர் சித்தராமையா 2024-2025ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை வெள்ளியன்று தாக்கல் செய்தார். அப்போது “தேவையான அனு மதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் என 3 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன” என்று கூறினார். சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழ்நாடு அரசின் அனுமதி யின்றி கர்நாடக அரசால் மேகதாது அணையைக் கட்ட முடியாது. கர்நாடகம் நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முடியாது. அதுதான் சட்டம்; அதுதான் நியதி” என்று உறுதி படத் தெரிவித்தார்.