tamilnadu

img

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: பணத்தை இழந்த மக்களுக்கு உரிய நீதி வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பணத்தை இழந்த மக்களுக்கு உரிய நீதி வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டி.தேவநாதன் யாதவ் என்பவர் உள்ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலின்போதே நிதி நிறுவனத்தல் நிரந்தர வைப்பு வைத்தவர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புதொகை உறுப்பினர்களாக உள்ளனர். முதலீடு செய்யும் பணத்திற்கு 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக வட்டி தரப்படும் என்று நிறுவனம் அறிவித்ததால், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், முதியவர்கள், சிறுகுறு தொழில் செய்வோர், நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் முதலீடு செய்தனர்.

நிரந்தர வைப்பு வைத்தவர்களுக்கு முதிர்வுத் தொகையை வழங்காமல் நிறுவனம் அலைகழித்து வந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற சமயத்தில் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க நிறுவனம் மறுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது ஒன்றுதிரண்டு மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் முறையீடு செய்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து தேவநாதன் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,

முதல் குற்றவாளியான தேவநாதன் யாதவ், சிறையில் இருந்த படியே  ஜாமினில் வெளிவருவதற்கு தனது அடியாள் மூலம் சில முதலீட்டாளர்களோடு பேரம் பேசி சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த சதிச் செயலில் பாஜகவினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிரந்தர வைப்பாளர்கள் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வெதும்பி வருகின்றனர்.

தேவநாதன் யாதவ் அரசியல் செல்வாக்கு மிக்கவர். பொதுஇடங்களில் பிரதமருடன் காணப்பட்டவர். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, சாட்சியங்களை கலைத்து வெளியே வந்தால், புகார் கொடுத்தவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்த  வேண்டும். குற்றவாளி தப்பி செல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  விரைவு நீதிமன்றம் அமைத்து வழக்கை துரிதமாக விசாரித்து மக்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.