tamilnadu

img

பத்திரிகையாளராக  வேண்டும்  என்ற எனது  கனவை நிறைவேற்றியது தீக்கதிர் – குமரேசன்    

இன்று 60 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தீக்கதிரில் 32 ஆண்டுகள் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு மதிப்புமிக்க அனுபவச் சொத்து. பணி ஓய்வுக்குப் பிறகு அந்த நாட்களின் நினைவுக் கடலில் நீந்துகையில்...     

மதுரையில் வாழ்ந்தபோது முதன்முதலில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டுபோய் ஆசிரியர் குழுவிடம் கொடுத்தது,  அடுத்த சில நாட்களிலேயே அது வெளியிடப்பட்டது.  சிறுசிறு மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்தது.  

பின்னொரு சூழலில் கே. முத்தையா தலைமையிலான ஆசிரியர் குழுவில் இணைந்தது.  சென்னை பதிப்பு தொடங்கப்பட்டபோது இங்கே வந்தது என ஒவ்வொன்றாய்  அலையடித்து உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. கட்சியின் கருத்துப் பத்திரிகையாக நடத்துவதா, செய்தி ஏடாகக் கொண்டு செல்வதா  என்றொரு விவாதம் வந்தது.  

தீக்கதிர், தேசாபிமானி, கணசக்தி, பிரஜாசக்தி, லோக் லஹார் ஆகிய பத்திரிகைகளின் வளாகங்களிலும் வாசகர்களிடையேயும் கட்சிக் குழுக்களிலும் அந்த விவாதம் நடத்தப்பட்டது.  கருத்துக்களுடன் கூடிய செய்திப்  பத்திரிகையாக  நடத்த வேண்டும் என இஎம்எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டியது.  

கட்சி பத்திரிகை,  அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை  என்று தெரிந்தும் கல்லூரிகளிலிருந்தும்  பல்கலைக்கழகங்களிலிருந்தும்  ஊடகவியல் மாணவர்கள் விடுமுறைக் கால பயிற்சிக்காக தீக்கதிர் பதிப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றால் அதற்கு அந்த வழிகாட்டல் ஒரு முக்கியமான காரணம். அவ்வாறு பயிற்சிக்கு வந்த பலரும் இன்று ஊடகத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.    

கே. முத்தையா அவர்களைத் தொடர்ந்து  வே. மீனாட்சி சுந்தரம்,  வி.பரமேஸ்வரன், இன்று மதுக்கூர் இராமலிங்கம்  ஆகியோர் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க அவர்களோடு இணைந்து பணியாற்றியது பல்கலைக்கழக படிப்புகளுக்கு சமம்.  

சென்னைப் பதிப்பிற்கு சு.பொ. அகதியலிங்கம் பொறுப்பாசிரியராகச் செயல்பட அவருடன் சேர்ந்து பணிபுரிந்தேன். பின்னர் நான் பொறுப்பாசிரியராக அமர்ந்தேன். இடையில் உ.ரா. வரதராசன் தீக்கதிர் பதிப்புகளுக்கு ஒரு வழிகாட்டியாக வந்தார். மதுரையில் ஐ. மாயாண்டி பாரதி எங்களுடன் பேனா  பிடித்தது மறக்கக் கூடிய அனுபவமா என்ன? பாண்டி, மயன், ஆர். பெரியசாமி, மயிலை பாலு,  கார்ட்டூனிஸ்ட் வீரா, ப. முருகன்… இப்படி ஒவ்வொருவருடனான அனுபவம் குறித்தும் எழுதிக்கொண்டே போகலாம்.    

இன்றைக்கு எஸ்.பி.ராஜேந்திரன், ஏ.விஜயகுமார், ராஜா, மாரி, டிஜிட்டல் பதிப்பு கண்ணன் உள்ளிட்டோர் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். பொது மேலாளராக அப்துல் வகாப், எஸ்.ஏ.பெருமாள், க.உதயகுமார், சி. கல்யாணசுந்தரம், மாணிக்கம், பன்னீர் செல்வம், ராஜ்மோகன், உஷா ஆகியோர் பங்களிப்பும் முக்கியமானது. கட்சியிலிருந்து நிர்வாக வழிகாட்டிகளாக கே.தங்கவேல், க.கனகராஜ், எம்.என்.வெங்கட்ராமன், தற்போது என். பாண்டி  பணிகள் குறிப்பிடப்பட வேண்டியவை.  

மாவட்டச்  செய்தியாளர்களின் உழைப்பு தீக்கதிர் செய்திகளில் பிரதிபலிக்கிறது. சென்னையில் என்னோடு பணியாற்றிய  டி.எஸ். ரவீந்திரதாஸ்,  ஸ்ரீராமுலு, கமலக்கண்ணன்,  ஜாபர்,  கவாஸ்கர்…  

வயதின் விளைவாகிய மறதியால் பல முக்கியமான பெயர்கள் நிச்சயமாக விடுபட்டிருக்கும் என்ற அச்சத்தால் மேலும் பலரது  பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன். அச்சகத் தொழிலாளர்கள், விநியோக ஊழியர்கள், விளம்பர சேகரிப்புப் பொறுப்பாளர்கள்  அனைவரது கூட்டு உழைப்பால் தீக்கதிர் பயணிக்கிறது. முன்பு அவசரநிலை ஆட்சி,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்த கலவரத்தைப் பயன்படுத்தி தீக்கதிர் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,  இன்று பத்திரிகைக் காகித விலை உட்பட கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொண்டு தீக்கதிரின் பயணம் தொடர்கிறது.

அரசியல், சமூகம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மார்க்சிய கண்ணோட்டத்துடன் கருத்துகளை கொண்டு செல்வதில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறது.    

இன்று காலை மதுரையில்  புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில். காரல் மார்க்ஸ் சிலை  திறப்புடன் தீக்கதிர் அறுபதாம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. நேரில் சென்று அதில் கலந்துகொள்ள முடியாத ஆதங்கத்துடனும், நவம்பரில் சென்னையில் நிறைவு விழா நடைபெறும்போது அதில் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்புடனும்…தீக்கதிருக்கு வணக்கங்கள்…தீக்கதிருக்காக உழைப்போருக்கு வாழ்த்துக்கள்…  -

- தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் குமரேசன்