தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை, மே 27- திருவண்ணாமலை மாவட்டம். ஆரணி அரசு போக்குவரத்து பணிமனையில் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுநராக பணி செய்து வருகிறார். ஓட்டுநர் பாலாஜி என்பவருக்கு ஏற்கெனவே காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது முறையாக ஓட்டுநர் பணி செய்து வருகிறார். இரண்டு நாட்கள் தொடர்ந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொடர்ந்து கூடுதல் பணிச்சுமை கொடுத்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 27) மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி ஆரணி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். பின்னர் அங்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் ஓட்டுநர் பாலாஜியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி சுமை அளிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேரு சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை மகாத்மாகாந்தி சிலையில் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி. ஜெயக்குமார், துணை பேரவை தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி (எ)ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிக பாலிசிகள் விற்பனை: எல்ஐசி இந்தியா கின்னஸ் சாதனை
சென்னை, மே 27 24 மணிநேரத்தில் அதிக பாலிசிகளை விற்பனை செய்து உலக சாதனை படைத்ததன் மூலம் எல்ஐசி இந்தியா கின்னஸ் சாதனை பட்டத்தை வென்றுள்ளது. கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சாதனையானது, ஜனவரி 20ந் தேதி அன்று, அர்ப்பணிப்புணர்வு மிக்க எல்ஐசி முகவர்களின் சிறப்பான செயல்திறனால் சாத்தியமானது. நடப்பு ஆண்டில் ஜனவரி 20ந் தேதி அன்று, எல்ஐசி நிறுவனத்தின் 4,52,839 முகவர்கள் மூலம் இந்தியா முழுவதும் 5,88,107 ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த மகத்தான முயற்சி ஆயுள் காப்பீட்டுத் துறையில் முகவர் உற்பத்தித்திறனுக்கான புதிய உலகளாவிய அளவுகோலை நிறுவியுள்ளது.