tamilnadu

img

ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்த முகமது அலி ஜின்னா- சென்னை காவல் ஆணையர் பாராட்டு

நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்பூலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த முகமது அலி ஜின்னா என்பவரின் மனிதநேய சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக சென்னை அண்ணா சிலை அருகில் 3 ஆம்பூலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதைக் கண்ட முகமது அலி ஜின்னா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை விலக்கிவிட்டே  நெடுந்தூரம் நடந்தே சென்றார். இதனால் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடிந்தது.

முகமது அலி ஜின்னா தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமூக சேவகர் என்பதும், கடந்த 8 ஆண்டுகளாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரையில் அவசர சிகிச்சை பிரிவில் விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முகமது அலி ஜின்னாவின் மனிதநேய சேவை குறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.