tamilnadu

img

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு!

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துளை பரப்பியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8 ஆம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு, முதல்வரை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய இருவரை கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தேவராஜன் தெரிவித்தார்.