மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 24,25,336 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.1,455.20 கோடியும், நிவாரண தொகை கோரி விண்ணப்பித்த 53,000 குடும்பங்களுக்கு ரூ.31.73 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.
இதையடுத்து நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இவ்வழக்கை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.