சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தொழிலாளி வர்க்கப் போராளியும், மாநிலச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலக்குழு செவ்வஞ்சலி செலுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. தங்கவேல் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14 தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 13 அன்று அதிகாலையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வணக்கத்தையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
பனியன் தொழிலாளியாய்...
சாதாரண குடும்பத்தில் பிறந்த தோழர் கே. தங்கவேல் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பனியன் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களை ஒன்றுதிரட்டி பல கட்ட போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். ஒன்றுபட்ட கோவை மாவட்ட பனியன் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியவர். அவர் பொறுப்பு வகித்த போது பனியன் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுத்தந்தவர். மேற்கு மண்டலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவராக, மிகச் சிறந்த முறையில் பணியாற்றி தனி முத்திரைபதித்தவர். கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக பணியாற்றி, பல்வேறு மாவட்டங்களுக்கும் பொறுப்பாக இருந்து வழிகாட்டியதோழர்.
மக்களின் தோழனாய்...
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட வளர்ச்சி குறித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதுகுறித்தும், தொழிலாளர் நலன்களுக்காகவும் சட்டமன்றத்தில் வாதாடியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அதற்குப்பிறகும் கூட தொகுதி மக்களோடுமிக நெருக்கமாக பழகியவர், அவர்களது சுக, துக்கங்களில் பங்கெடுத்தவர்.ஆழ்ந்த வாசிப்பாளர். மார்க்சிய கொள்கைகளை விளக்கி தலைமை பண்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்பெடுக்கும் சிறந்த வகுப்பாசிரியர்.பொது வாழ்க்கையில் எளிமையாகவும், தூய்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர். மிகச் சிறந்த பண்பாளர். இயற்கையிலேயே அமைதியான குணம் படைத்தவர். கட்சித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனது குடும்ப உறுப்பினர் போல பழகுபவர்.
பேரிழப்பு
தொழிலாளி வர்க்கத்தின் மீது மிகுந்த பற்றும், மார்க்சிய கொள்கையின் மீது உறுதியான பிடிப்பும் கொண்டவராக தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், குறிப்பாக, மேற்கு மண்டல தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் கே.தங்கவேல் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமெனவும், கட்சிக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமெனவும் கட்சி அணிகளை மாநிலக்குழுக் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இரங்கல்
கொரோனா தொற்று காரணமாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். தோழர் கே.தங்கவேல் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக இதயப்பூர்வமான அஞ்சலியையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துள்ளார். தோழர் கே.தங்கவேல் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் காரத் அனுப்பியுள்ள செய்தியில், தோழர் கே.தங்கவேல் மறைவு அதிர்ச்சியளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.