tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

நீதிமன்றத்தில்  மருத்துவ முகாம் 

கடலூர், ஜூன் 23- கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கடலூர், கடலூர் பார் அசோசியேஷன், லாயர்ஸ் அசோசியேஷன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடலூர், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை  இணைந்து கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது .

 இம்முகாமில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற  மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமையில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது மாவட்ட நீதிபதி பிரகாஷ், போக்சோ  நீதிபதி லஷ்மி ரமேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் வனஜா,  கடலூர் பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர்  சுரேஷ்குமார், லாயர்ஸ் அசோசியேசன் தலைவர்  அமுதவல்லி, செயலாளர்  கார்த்திகேயன்,  இணை இயக்குநர் நலப்பணிகள் ஹிரியன் இரவிக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர்  அசோக் பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனத்தில் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி,ஜூன் 23- அஞ்செட்டி வட்டம்,  மிளிதிக்கி கிராமம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்யானை உடல் மெலிந்த நிலையில் கடந்த வாரம் உலா வந்து கொண்டிருந்தது.அப்பகுதி கிராம மக்கள் அந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்த யானை அஞ்செட்டி வனச்சரகம் குந்துக்கோட்டை வனப்பகுதியில் சனிக்கிழமையன்று இறந்து கிடந்தது.அதை கண்டறிந்த வனத்துறையினர் இறந்த யானை உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  முதியோருக்கு வாக்கு படிவம் 12-டி 

விழுப்புரம், ஜூன் 23- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே விருப்பத்தின் பேரில் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 டி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, அய்யூர் அகரம் ஊராட்சியில், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களான வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வாக்கு செலுத்துவதற்கான 12-டி படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி வீடு, வீடாக சென்று நேரில் வழங்கினார்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு  

காஞ்சிபுரம், ஜூன் 23- கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் இதர போதைப் பொருள்களை விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுக்க அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் (ஜூன்.22) சனிக்கிழமையன்று நடைபெற்றது.

 10 மூட்டை குட்கா பறிமுதல்

 கடலூர், ஜூன் 23 - கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார்  கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை வாங்கி சோதனை செய்தனர். 

அப்போது அந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக சுந்தரம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள 10 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.