tamilnadu

img

நீட் மசோதா விவகாரத்தில் துரோகமிழைத்த ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகமிழைத்த ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்
மசோதாவை ஐந்து மாதங்களுக்கு பிறகு தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள
தமிழக ஆளுநரின் செயலென்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்
என்பதோடு, அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலை மீறி எடுக்கப்பட்டதொரு
தன்னிச்சையான நடவடிக்கையாகும். மேலும் மாணவர் நலனுக்கு எதிரானதாக உள்ளதாக
ஒரு சொத்தையான வாதத்தை முன்வைத்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ள
ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள
முடியாததுமாகும்.
குறிப்பாக, மாநில பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தின் மீது சட்டமன்றம்
ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் அதன் மீது
ஒரு மாநிலத்தின் ஆளுநர் முடிவெடுக்க முடியும். ஆனால் பொது பட்டியலில் உள்ள ஒரு
விஷயத்தின் மீது மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்ட மசோதாவை ஆளுநர்
ஒன்றிய அரசுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டுமே தவிர அதன் மீதான தனது கருத்தை
வெளிப்படையாக சொல்வதோ அல்லது திருப்பி அனுப்புவதோ கூடாது. உதாரணமாக
பொதுபட்டியலில் உள்ள ஜல்லிகட்டு விஷயத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில
சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட மசோதா ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு,
ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அதைப் போலவே, நீட் விலக்கு
மசோதாவையும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்திருக்க
வேண்டுமே தவிர, தன்னிச்சையாக மாநில அரசுக்கே திருப்பி அனுப்பியிருப்பது அரசியல்
சாசனத்திற்கு முற்றிலும் விரோதமானதொரு நடவடிக்கையாகும்.
மேலும் நீட் விலக்கு சட்டத்தால் தமிழக மாணவர்களின் நலனுக்கும்
எதிர்காலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து உண்மைக்கு
மாறானதாகும். ஏனெனில் நீட் குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையே கருத்துக்களை கேட்ட நீதியரசர்
ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வால் தமிழகத்தில் ஒரு பெரும் சமூக தாக்கமும்,

மாணவர்களிடையே ஒரு உளவியல் தாக்கமும் உருவாகியுள்ளதாக
தெரிவித்துள்ளதோடு, இத்தகைய தேர்வு முறையால் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும்
மருத்துக் கல்வி என்பது எட்டாக் கனியாக மாறியுள்ளதாகவும் தனது கருத்தை
தெரிவித்திருக்கிறது. எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் கண்டிப்பாக விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக மக்கள் மற்றும்
மாணவர்களின் உணர்வு இவ்வாறு இருக்க இதற்கு முற்றிலும் எதிரானதாக தமிழக
ஆளுநரின் கருத்து அமைந்திருக்கிறது.
அதே போல நீட் தேர்வின் அவசியம் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை
ஒன்றையும் கோடிட்டு காட்டும் ஆளுநரின் வாதமும் பொருத்தமான ஒன்றல்ல.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் மருத்துவ படிப்பிற்கான இடங்களின் ஒதுக்கீடு
தொடர்பானதொரு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நீட் தேர்வு குறித்த
பொதுவான தீர்ப்பாக ஆளுநர் சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும், அரசியல் சாசனத்தின்
வழிகாட்டுதல்கள் மற்றும் கூட்டாட்சி நெறிமுறைகளை முற்றாக புறக்கணிக்கும்
வகையிலும் நீட் மசோதா விவகாரத்தில் நடந்து கொண்ட தமிழக ஆளுநரின் ஒரு
தலைபட்சமான நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு
தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆளுநரின் இத்தகைய
நடவடிக்கையை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிப்பதற்காக அனைத்து
கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்பதோடு, நீட்
விலக்கு பிரச்னையில் மீண்டும் சட்டமசோதாவை நிறைவேற்றுவது உள்ளிட்ட தமிழக
அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஒத்துழைப்பை
முழுமையாக அளிக்கும் எனவும் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.