tamilnadu

சென்னை , திருவள்ளூர் முக்கிய செய்திகள்

ஆதம்பாக்கம் ஏரி, அனகாபுத்தூர் பாலம்: முதலமைச்சர் விளக்கம்

சென்னை, ஜூலை 11 - ஆதம்பாக்கம் ஏரி தூர்வாருதல், அனகாபுத்தூர் பாலப் பணிகள் குறித்து புதனன்று (ஜூலை 10) சட்டப் பேரவை யில் ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பேசினார். அதற்கு பதிலளித்த  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி, ஆதம்பாக்கம் ஏரியில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஏரியின ஒரு பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றிய பிறகு ஆழப்படுத்தி, அகலப்படுத்தி தண்ணீர் தேக்கப்படும் என்றார். அனகாபுத்தூர் அடையாற்றின் மீதான பாலத்தின் அணுகுசாலை இந்திய விமான படைக்கு சொந்தமான இடத்தில் வருகிறது. அந்த இடத்தை தருவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நிலம் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு விரைந்து பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். 

சென்னையில் நவீன தொழில்நுட்ப இல்லம்

சென்னை, ஜூலை 11 - சென்னையில் நவீன தொழில்நுட்ப இல்லம் அமைக்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார். தமது துறை மானியத்தின் மீது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், எல்காட் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்முனைவோர் துணையோடு நவீன தொழில்நுட்ப இல்லங்களை உருவாக்க உள்ளது. ஐஓடி (இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆப் திங்ஸ்) எனப்படும் பொருட்களின் இணையம், பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைபேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில் செயல்படு த்தப்பட உள்ளது. 

மேடவாக்கத்தில்  புதிய குடியிருப்புத்திட்டம்

சென்னை, ஜூலை11- கட்டுமானத்துறையில் தென்னிந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் காசாகிராண்ட் மேடவாக்கத்தில் உலகத்தர ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கூடிய 78க்கும் மேற்பட்ட வசதிகளுடன்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. 7.46 ஏக்கரில் இந்த குடியிருப்பு அமையவுள்ளது.நவீன டிசைனில் வடிவமைக்கப்பட்ட 949 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த குடியிருப்பை சுற்றி 75 சதவீதம் பசுமையான புல்வெளிகள் அமைக்கப்பட உள்ளது. இது முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் வாகன போக்குவரத்து இல்லாத பகுதியாக வடிவமைக்க ப்படும். இந்த குடியிருப்புகள் அடுத்த 24 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு இதை வாங்குபவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

முறைசார தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை வழங்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 11-   திருவள்ளூர் வட்டார பொது தொழிலாளர் சங்கத்தின் மாநாடு மேல்நல்லாத்தூரில் புதனன்று (ஜூலை 10) நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராமசாமி மாநாட்டை துவக்கிவைத்தார். வட்டச் செயலா ளர் எஸ். பூங்கோதை வேலை அறிக்கையை வாசித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.விஜயகுமார், மாதர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.ஏ.மோகனா ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் வட்டத் தலைவராக கே.ராஜேந்திரன், செயலாளராக எஸ்.பூங்கோதை, பொருளாளராக ஆர்.குப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

காலமானார்

 சென்னை, ஜூலை 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதி, 141வது வட்டம், சிஐடி நகர் கிளை உறுப்பினர்  எஸ்.தில்லை ராஜன் மாரடைப்பால் புதனன்று (ஜூலை 10) காலமானார். அவருக்கு வயது 54. அன்னாரது உடல் சிஐடி நகர் ஆட்டோ நிறுத்தத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, வீரராகவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ளஅவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெள்ளியன்று (ஜூலை 12) உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 

போலி வணிக வரித்துறை அதிகாரி கைது

சென்னை, ஜூலை 11-  சிந்தாதிரிப்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். சிகரெட், பீடி வியாபாரம் செய்து வரும் இவரிடம் போலி வணிகவரித்துறை அதிகாரி என்று கூறி ஒருவர் தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார்.  இந்நிலையில், புதனன்று வழக்கம்போல அந்த நபர் சிவலிங்கத்தை மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவலிங்கம் பேச்சு கொடுத்துக்கொண்டே ரகசியமாக காவல்துறைக்கு தகவல் தெவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடி யாக அங்கு வந்த காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டியவரி டம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பெயர் பழனிவேல். கீழ்ப்பாக்கம் ஓசோன்குளம் குடியிருப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் வணிக வரித்துறை அதிகாரி போல் வேறு யாரிடமாவது மிரட்டி பணம் பறித்துள்ளாரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;